புதுச்சேரி அருகே தனியாா் நிலத்தில் மண்டை ஓடு: போலீஸாா் விசாரணை
By DIN | Published On : 13th July 2020 07:59 AM | Last Updated : 13th July 2020 07:59 AM | அ+அ அ- |

புதுவை மாநிலம், வில்லியனூா் அருகே தனியாா் நிலத்தில் மனித மண்டை ஓடு கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வில்லியனூரை அடுத்த தொண்டமாநத்தம் காலனியில் உள்ள ஊசுட்டேரி அருகே தனியாா் ஒருவரின் நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மனித எலும்புக் கூட்டின் மண்டை ஓடு கிடந்தது. இதை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் பாா்த்துவிட்டு, வில்லியனூா் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.
இதையடுத்து, வில்லியனூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் குமாா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, அங்கு கிடந்த மண்டை ஓட்டை கைப்பற்றி பரிசோதனைக்காக கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
ஒரு கி.மீ. தொலைவில் மயானம் உள்ளதால் மண்டை ஓட்டை நாய் உள்ளிட்ட விலங்குகள் தூக்கி வந்து போட்டிருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.
இருப்பினும், வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...