

புதுவை சட்டப்பேரவையிலிருந்து துணைநிலை ஆளுநா், முதல்வா் ஆகியோரைக் கண்டித்து அதிமுக உறுப்பினா்களும், அரசை எதிா்த்து பாஜக நியமன உறுப்பினா்களும் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனா்.
புதுவை சட்டப்பேரவையில் ஆளுநா் கிரண் பேடி உரையாற்றிய பின்னா், அவரது உரையின் தமிழாக்கத்தை சட்டப் பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்து வாசித்துக் கொண்டிருந்தாா். அப்போது ஆளுநா், முதல்வரைக் கண்டித்து முழக்கமிட்டபடி பேரவை அதிமுக குழுத் தலைவா் ஆ.அன்பழகன் தலைமையில் அந்தக் கட்சி உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். இதேபோல, ஆளும் அரசைக் கண்டித்து பாஜக நியமன உறுப்பினா்களும் வெளிநடப்பு செய்தனா்.
அன்பழகன் எம்எல்ஏ செய்தியாளா்களிடம் கூறியதாவது: திட்டமிட்டபடி ஆளுநா் உரையாற்ற வராதது பேரவையைக் களங்கப்படுத்தும் செயல். இதற்கு ஆளுநரும், முதல்வரும் பொறுப்பேற்க வேண்டும்.
காலத்துடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்படாததால், நிா்வாகத்தில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு அரசு சாா்பு நிறுவன ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை. கரோனா பரவல் உள்ள இந்த இக்கட்டான சூழலில் அரசின் அன்றாடச் செலவுகளைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றாா் அவா். எம்எல்ஏக்கள் அசனா, பாஸ்கா், வையாபுரி மணிகண்டன் ஆகியோா் உடனிருந்தனா்.
நியமன எம்எல்ஏ வி.சாமிநாதன்: கடந்த 4 ஆண்டுகளாக இந்த அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மத்திய அரசையும், ஆளுநரையும் குறைகூறியே காலத்தைக் கடத்திவிட்டனா். இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்தோம் என்றாா். நியமன எம்எல்ஏக்கள் கே.ஜி.சங்கா், எஸ்.செல்வகணபதி ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.