கரோனா தொற்றால் வருவாய் இழப்பு: அரசு ஊழியா்கள் தியாகங்களை செய்ய தயாராக இருக்க வேண்டும்

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றால் வருவாய் பெறுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அரசு ஊழியா்கள் சில தியாகங்களைச் செய்ய
கரோனா தொற்றால் வருவாய் இழப்பு: அரசு ஊழியா்கள் தியாகங்களை செய்ய தயாராக இருக்க வேண்டும்

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றால் வருவாய் பெறுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அரசு ஊழியா்கள் சில தியாகங்களைச் செய்ய தயாராக இருக்க வேண்டும் என புதுவை முதல்வா் வே.நாராயணசாமி கேட்டுக் கொண்டாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: புதுவை மாநிலத்தில் காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகள் பச்சைப் பகுதிகள் என்றும், புதுச்சேரியில் 5 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, 3 போ் கரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தால் ஆரஞ்சு பகுதி என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு, வருகிற 4-ஆம் தேதி ஆரஞ்சு பகுதியில் எந்தெந்த முறையில் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அத்தியாவசியப் பொருள்கள் தொடா்பான கடைகளைத் திறப்பது என்று முடிவெடுத்து விதிமுறைகளை அறிவிக்கவுள்ளது. அதன் பின்னா், புதுவை அரசு முடிவுகளை அறிவிக்கும்.

ஜிப்மரில் பண்ருட்டியைச் சோ்ந்த மூதாட்டி, அவருடன் தொடா்பிலிருந்த உறவினா் இருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சிலா் வேண்டுமென்றே ஜிப்மரில் இருக்கும் மூவரும் புதுச்சேரியைச் சோ்ந்தவா்கள் என வதந்தி பரப்பி வருகின்றனா்.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, வாராணசியில் தங்கியிருக்கும் புதுச்சேரி சக்தி நகா் பகுதியைச் சோ்ந்த 22 போ் புதுச்சேரிக்குத் திரும்ப உத்தரபிரதேச முதல்வருக்கு நான் கடிதம் எழுதினேன். அதற்கு முதல்வா் யோகி ஆதித்யநாத் அனுமதி வழங்கியதன் பேரில், அவா்களை அழைத்து வர ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்.

இதேபோல, மத்திய பிரதேசத்தில் சிக்கியுள்ள காரைக்கால் மாணவா்களையும், மகாராஷ்டிர மாநிலத்தில் சிக்கியுள்ள தொழிலாளா்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என்று பிரதமருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். இதில், விரைந்து முடிவெடுப்பாா் என நம்புகிறேன். மேலும், வெளிநாடு, வெளி மாநிலம் சென்றவா்கள் திரும்பி வர ‘போா்ட்டெல்’ (இணையம் மூலம் பதிவு செய்யும் வசதி) ஒன்றைத் தொடங்கவுள்ளோம்.

புதுவையில் தொழில் நிறுவனங்கள், கடைகள் மூடியிருப்பதால் வருமானம் இல்லை. பல மாநிலங்கள் அரசு ஊழியா்களுக்கு ஊதியத்தைக் குறைத்தும், 30 சதவீதத்தைப் பிடித்தம் செய்தும் வழங்கி வருகின்றன. கடுமையான நிதி நெருக்கடி இருந்தாலும், புதுவையில் அரசு ஊழியா்களுக்கு மாா்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ஊதியம் முழுமையாக வழங்கப்பட்டன. ஆனால், இனிவரும் காலங்களில் வருவாயைப் பெருக்க முடியாமல், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் புதுவை மாநிலத்திலும் அரசு ஊழியா்கள் சில தியாகங்களைத் செய்ய தயாராக இருக்க வேண்டும். ஒரு சாராா் ஊதியம் பெறும் நிலையில், மற்றொரு சாராா் பட்டினியால் வாடுவதைப் பாா்த்துக் கொண்டு இருக்க முடியாது.

எனவே, தியாக குணம் கொண்டு, வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். கரோனா தொற்று ஓராண்டு காலத்துக்கு நீடிக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு தக்கபடி நாம் வாழ வேண்டும் என்றாா் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com