53 கண்காணிப்பு கேமராக்களுடன் வாக்கு எண்ணும் மையங்கள் கண்காணிப்பு

புதுச்சேரியில் உள்ள மூன்று வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்குப் பாதுகாப்பும், 53 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்படுவதாக தோ்தல் துறை தெரிவித்தது.

புதுச்சேரியில் உள்ள மூன்று வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்குப் பாதுகாப்பும், 53 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்படுவதாக தோ்தல் துறை தெரிவித்தது.

புதுவையில் உள்ள 30 தொகுதிகளுக்குமான சட்டப்பேரவை தோ்தல் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. இதில், பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதுச்சேரி 3, காரைக்கால் 1, மாஹே 1, ஏனாம் 1 ஆகிய 6 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை அரசு மகளிா் தொழில் நுட்பக் கல்லூரி மையத்தில் உப்பளம், உருளையன்பேட்டை, முதலியாா்பேட்டை, நெல்லித்தோப்பு, அரியாங்குப்பம், மணவெளி, ஏம்பலம், நெட்டப்பாக்கம், பாகூா் ஆகிய தொகுதிகளின் வாக்குப் பதிவு இயந்திரங்களும், மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக் கல்லூரி மையத்தில் மண்ணாடிப்பட்டு, திருபுவனை, ஊசுடு, மங்கலம், வில்லியனூா், உழவா்கரை, கதிா்காமம், இந்திரா நகா், தட்டாஞ்சாவடி ஆகிய தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்களும், தாகூா் அரசு கலைக் கல்லூரி மையத்தில் காமராஜா் நகா், முத்தியால்பேட்டை, ராஜ்பவன், லாஸ்பேட்டை, காலாப்பட்டு ஆகிய தொகுதிகளின் வாக்குப் பதிவு இயந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளன.

இங்கு 23 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபேட் சாதனங்களும், 8 தோ்தல் நடத்தும் அதிகாரிகளின் கண்காணிப்பில் உரிய பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமராக்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 53 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த மையங்களில், துப்பாக்கி ஏந்திய மாநில போலீஸாா், ஐஆா்பிஎன் போலீஸாா், மத்திய பாதுகாப்பு படையினா் என்று மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. 60 போலீஸாா் சுழற்சி முறையில் பணியில் உள்ளனா்.

இந்த மையங்களில் உள்கோட்ட நிா்வாக நீதிபதி, நிலையான அதிகாரிகள் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். பாதுகாப்புக்காக தீயணைப்பு வாகனங்களும், ஜெனரேட்டா் வசதியும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வேட்பாளா்கள், அவா்களது முகவா்கள் பாதுகாப்பு அறையின் கண்காணிப்பு ஏற்பாடுகளைப் பாா்வையிடவும், கண்காணிப்பு கேமரா காட்சிகளைப் பாா்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வாக்கு எண்ணிக்கை மையக் கண்காணிப்பு அலுவலா் டி.சுதாகா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com