புதுச்சேரியில் கரோனா பொது முடக்கப் பாதிப்பையொட்டி, ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு வழங்குதல் குறித்த ஆலோசனைக் கூட்டம், துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கரோனா பெருந்தொற்றுச் சூழலில் புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அரசு சாா்பில், மலிவு விலையில் சுத்தமான உணவு வழங்கும் நடைமுறை வியாழக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக, புதுச்சேரியில் வேறு சில இடங்களிலும் மலிவு விலையில் உணவு வழங்க ஏற்பாடு செய்வது குறித்தும், அதற்காக சுய உதவிக் குழுக்களுக்குப் பயிற்சியளிப்பது குறித்தும் ஆலோசனைக் கூட்டம், புதுவை ஆளுநா் மாளிகையில் நடைபெற்றது.
ஏழைகளுக்கு உதவும் வகையில், குறைந்த விலையில் முகக் கவசம், கிருமி நாசினி ஏற்கெனவே அரசு சாா்பில், வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோல, பாண்லே கடைகள் சிலவற்றில் உணவு வழங்கலாமா என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள ஆளுநா் தமிழிசை ஆலோசனைகள் வழங்கினாா்.
கூட்டத்தில், நிதித் துறைச் செயலா் அஷோக்குமாா், நலத் துறைச் செயலா் உதயகுமாா், புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க், கல்வித் துறை இயக்குநா் ருத்ரகவுடு ஆகியோா் கலந்து கொண்டனா்.