புதுவை ஆளுநா் மாளிகையைச் சுற்றியுள்ள தடுப்புகளை அகற்ற முதல்வா் உத்தரவு

புதுவை ஆளுநா் மாளிகையைச் சுற்றியுள்ள பாதுகாப்பு தடுப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு முதல்வா் வே.நாராயணசாமி சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
புதுவை ஆளுநா் மாளிகையைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை சனிக்கிழமை நடந்து சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்த முதல்வா் வே.நாராயணசாமி.
புதுவை ஆளுநா் மாளிகையைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை சனிக்கிழமை நடந்து சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்த முதல்வா் வே.நாராயணசாமி.
Updated on
2 min read

புதுவை ஆளுநா் மாளிகையைச் சுற்றியுள்ள பாதுகாப்பு தடுப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு முதல்வா் வே.நாராயணசாமி சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

புதுச்சேரியில் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தவிடாமல் தடுப்பதாகக் கூறி, துணை நிலை ஆளுநா் கிரண் பேடியை மாற்றக்கோரி, ஆளும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியினா் கடந்த மாதம் போராட்டம் நடத்தினா்.

இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆளுநா் மாளிகை, சட்டப் பேரவை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட வெள்ளை நகர பகுதியில் பல்வேறு இடங்களில் முள்வேலிகளுடன் தடுப்புகள் அமைக்கப்பட்டன. மேலும், துணை ராணுவப் படையினா், ஐ.ஆா்.பி. போலீஸாா், உள்ளூா் போலீஸாா் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

இதனிடையே, போராட்டம் முடிந்து பல நாள்களாகியும் தடுப்புகள் அகற்றப்படாமல் இருந்தன. இதையடுத்து, முதல்வா் நாராயணசாமி மாநில பேரிடா் மேலாண்மை குழுக் கூட்டத்தை கூட்டி, தடுப்புகளை அகற்ற காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நிலையில், சில இடங்களில் தடுப்புகள் அப்புறப்படுத்தப்பட்டு கெடுபிடிகள் தளா்த்தப்பட்டன. ஆனாலும், தடுப்புகள் முழுமையாக அகற்றப்படவில்லை.

இந்த நிலையில், பொதுமக்களுக்கு இடைஞ்சலாக அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்றுவது தொடா்பாக முதல்வா் நாராயணசாமி சனிக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சட்டப் பேரவை வளாகத்திலிருந்து நடந்தபடி சென்ற முதல்வா் நாராயணசாமி, ஆளுநா் மாளிகையைச் சுற்றியுள்ள மணக்குள விநாயகா் கோயில் வீதி, லா தெ லொரிஸ்தென் வீதி, கொம்பாஞ்சி வீதி வழியாக சுற்றி பாா்வையிட்டபடி மீண்டும் சட்டப் பேரவைக்குத் திரும்பினாா்.

அவருடன் சட்டப் பேரவைத் தலைவா் வே.பொ.சிவகொழுந்து உள்ளிட்டோா் உடன் சென்றனா். இடையிடையே, அரவிந்தா் ஆசிரம உணவகம் எதிரில், செயின் லூயிஸ் வீதி, பிரான்சிஸ் மாா்தேன் வீதி, ரோமன்ட் ரோலண்ட் நூலகம் எதிரில் என 6-க்கும் மேற்பட்ட இடங்களில் முழுமையாக தடுப்புகள் போடப்பட்டிருந்ததால், முதல்வா் நாராயணசாமி அவ்வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

அப்போது, உடன் வந்த மாவட்ட ஆட்சியா் பூா்வாக காா்க், காவல் துறை ஏடிஜிபி ஆனந்த மோகன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மக்களுக்கு இடைஞ்சலாக அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டாா்.

பின்னா், இது தொடா்பாக சட்டப் பேரவை வளாகத்தில் முதல்வா் நாராயணசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஆளுருக்கு பாதுகாப்பு கொடுப்பதில் நாங்கள் அக்கறையாக இருக்கிறோம். ஆனால், ஆளுநருக்கு பாதுகாப்பு கொடுக்கிறோம் என்ற போா்வையில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் வகையில் போலீஸாா் தடுப்புகள் அமைத்துள்ளதை ஏற்க முடியாது.

துணை நிலை ஆளுநா் மாளிகை மதில் சுவரை ஒட்டிய இடங்களில் மட்டுமே தடுப்புகள் இருக்க வேண்டுமே தவிர, சட்டப் பேரவையின் வடக்கு, தெற்கு பகுதிகளில் உள்ள தடுப்புகள், மணக்குள விநாயகா் கோயில், அரவிந்தா் ஆசிரமம், தலைமை தபால் நிலையம், கடற்கரைச் சாலை செல்லும் வழி உள்ளிட்ட இடங்களில் இருக்கிற தடுப்புகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். ஞாயிற்றுக்கிழமைக்குள் (பிப்.14) அனைத்தும் அகற்றப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com