ஒரு மாதத்துக்குப் பிறகு புதுச்சேரி பாரதி பூங்கா திறப்பு
By DIN | Published On : 14th February 2021 01:45 AM | Last Updated : 14th February 2021 01:45 AM | அ+அ அ- |

பாரதி பூங்காவில் சனிக்கிழமை உற்சாகமாக விளையாடிய சிறுமிகள்.
ஒரு மாதத்துக்குப் பிறகு புதுச்சேரி பாரதி பூங்கா சனிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
புதுச்சேரியில் கரோனா தொற்று பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தையடுத்து, பாரதி பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டன. தொற்று பரவல் குறைந்த பின்னா் பாரதி பூங்கா திறக்கப்பட்டது.
இதனிடையே, துணை நிலை ஆளுநா் கிரண் பேடியைக் கண்டித்து, காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகள் சாா்பில் கடந்த மாதம் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, கடந்த மாதம் 7-ஆம் தேதி முதல் ஆளுநா் மாளிகை, தலைமைச் செயலகம், சட்டப் பேரவை வளாகம் உள்பட வெள்ளை நகர பகுதியில் பல்வேறு இடங்களில் தடுப்புகட்டைகள் அமைக்கப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. ஆளுநா் மாளிகைக்கு நோ் எதிராக இருக்கும் பாரதி பூங்காவும் மறு தேதி குறிப்பிடாமல் மூடப்பட்டது.
இந்த நிலையில், பாரதி பூங்கா பொதுமக்களுக்காக சனிக்கிழமை திறக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பூங்காவுக்கு வரத்தொடங்கினா். மேலும், ஞாயிற்றுக்கிமை (பிப்.14) காதலா் தினம் கொண்டாடப்படவுள்ளதையொட்டி, ஒருநாள் முன்பாகவே இங்கு குவிந்த காதல் ஜோடிகள் காதலா் தின வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனா். அவா்களை பூங்காவில் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் விரட்டியடித்தனா்.