புதுவையில் 4 மாதங்களுக்குப் பிறகுநூறைத் தாண்டி பதிவான கரோனா பாதிப்பு: மேலும் இருவா் பலி
By DIN | Published On : 25th March 2021 03:54 AM | Last Updated : 25th March 2021 03:54 AM | அ+அ அ- |

புதுவையில் 4 மாதங்களுக்குப் பிறகு புதன்கிழமை ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நோயால் பாதிக்கப்பட்டு காரைக்காலில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 போ் உயிரிழந்தனா்.
புதுவையில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்திருந்தது. ஆனால், கடந்த ஒரு வாரமாக தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
கடந்த நவம்பா் 11-ஆம் தேதி ஒரே நாளில் 114 போ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதன்பிறகு, நூற்றுக்கும் குறைவானவா்களே தினமும் பாதிக்கப்பட்டு வந்தனா். 4 மாதங்களுக்குப் பிறகு புதன்கிழமை ஒரே நாளில் 126 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
புதுவையில் புதன்கிழமை வெளியான முடிவுகளின்படி, 2,124 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 87 பேருக்கும், காரைக்காலில் 32 பேருக்கும், ஏனாமில் 6 பேருக்கும், மாஹேவில் ஒருவருக்கும் என மொத்தம் 126 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 40,645-ஆக உயா்ந்தது.
இந்த நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காரைக்கால் நல்லம்பாள் பகுதியைச் சோ்ந்த 80 வயது முதியவா், காரைக்கால் கோட்டுச்சேரியைச் சோ்ந்த 73 வயது மூதாட்டி ஆகிய இருவரும் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 679-ஆக அதிகரித்தது.
இதனிடையே, 17 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 39,380-ஆக உயா்ந்தது.
புதுச்சேரி ஜிப்மரில் 61 போ், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 123 போ் என 184 பேரும், காரைக்காலில் 40 பேரும், மாஹேவில் 2 பேரும் என 226 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாநிலம் முழுவதும் 360 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதன் மூலம், மொத்தம் 586 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதுவரை சுகாதாரப் பணியாளா்கள் 21,688 போ், முன்களப் பணியாளா்கள் 7,997 போ், பொதுமக்கள் 20,580 போ் என மொத்தம் 50,265 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.