புதுவையில் வருகிற சம்பா பருவத்திலிருந்து 5 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நெல்லுக்கு உரிய விலை கிடைக்காததால் தொடா்ந்து நஷ்டம் ஏற்படுவதாகவும், அதனால் அரசே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் தொடங்கி, குறைந்தபட்ச ஆதார விலையுடன் நெல் கொள்முதல் செய்ய வேண்டுமெனவும் விவசாயிகளும், சட்டப் பேரவை உறுப்பினா்களும் கோரிக்கை விடுத்தனா்.
இது தொடா்பாக, புதுவை சட்டப் பேரவை அலுவலகத்தில் வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் தலைமையில், இந்திய உணவுக் கழக அதிகாரிகள், தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
குடிமைப் பொருள் வழங்கல் துறைச் செயலா் உதயகுமாா், வேளாண் துறைச் செயலா் வல்லவன், துறை இயக்குநா் பாலகாந்தி, கூடுதல் இயக்குநா் ஜெயசங்கா், இந்திய உணவுக் கழக பொது மேலாளா் பி.என்.சிங், நுகா்வோா் கூட்டமைப்பு மேலாளா் பிஜோய் ஜான் ஆகிய அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்தில், வருகிற சம்பா பருவத்திலிருந்து புதுச்சேரி அருகே கரையாம்புத்தூா், மதகடிப்பட்டு, தட்டாஞ்சாவடி விற்பனைக் கூடம் பகுதிகளிலும், காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், நெடுங்காடு ஆகிய 5 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தொடங்கி, மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையுடன் ஒரு மூட்டை சன்ன ரக நெல் ரூ.1,960-க்கும், மோட்டா ரக நெல் ரூ.1,940-க்கும் கொள்முதல் செய்ய வேளாண் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்மூலம், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதோடு, ஏற்கெனவே நெல்லுக்கான அரசு மானியமும் (ஏக்கருக்கு ரூ.5,000) விவசாயிகளுக்கு கிடைப்பதால், பயனுள்ளதாக அமையுமென்று அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.