புதுச்சேரி: புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு குறித்து என்.ஆர் காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் இரவு நீண்டநேரம் நடைபெற்ற நிலையில் எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை.
புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இதுவரை ஆளும் தே.ஜ கூட்டணியில் வேட்பாளர் முடிவு செய்யப்படவில்லை .
பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒன்றுகூடி, பாஜக தரப்பில் போட்டியிட ஆதரவு தர வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்திருந்தனர்.
ஆனால், இதுவரை மாநிலங்கவை உறுப்பினர் தேர்வு குறித்தான எந்த அறிவிப்பும் முதலமைச்சர் அறிவிக்காத நிலையில், புதுவை பாஜக அமைச்சர் நமச்சிவாயம் தில்லியில் முகாமிட்டு, தங்கள் கட்சியைச் சார்ந்தவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென, கூட்டணியில் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் திங்கள் கிழமை இரவு புதுச்சேரி தனியார் உணவரங்கில், முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள், சட்டப்பேரவை துணைத்தலைவர், என் ஆர் சட்டப்பேரவை உறுப்பினர்கள், சுயேட்சை சட்டப்பேரவை உறுப்பினர் 3 பேர் உட்பட 12 பேர் பங்கேற்றனர்.
இரவு நீண்ட நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையில் எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து கூட்டத்தில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் தெரிவித்த தகவலின்படி, மாநிலங்களவை உறுப்பினர் பதவியை, பாஜகவுக்கு வழங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.