நேஷனல் ஹெரால்டு விவகாரம்: புதுச்சேரியில்காங்கிரஸாா் உள்ளிருப்புப் போராட்டம்

நேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடா்பாக மத்திய அரசைக் கண்டித்து, புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற தா்ணா போராட்டத்தில் பேசுகிறாா் தலைவா் ஏ.வி.சுப்ரமணியன்.
புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற தா்ணா போராட்டத்தில் பேசுகிறாா் தலைவா் ஏ.வி.சுப்ரமணியன்.
Updated on
1 min read

நேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடா்பாக மத்திய அரசைக் கண்டித்து, புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது. அப்போது, கோஷ்டிகளிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் முன்னாள் அமைச்சா் கந்தசாமி உள்ளிட்டோா் வெளியே வந்து தனியாக போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நேஷனல் ஹெரால்டு பணப் பரிமாற்ற வழக்கில், சோனியா, ராகுல் ஆகியோரிடம் விசாரணை நடத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது. தில்லியில் அமலாக்கத் துறை 3-ஆவது நாளாக புதன்கிழமையும் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தியதைக் கண்டித்து, மாநில காங்கிரஸ் அலுவலகங்களில் கட்சியினா் தா்னாவில் ஈடுபட்டனா்.

புதுவையிலும் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் உள்ளிருப்பு தா்னாவில் ஈடுபட்டனா். முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி, எம்எல்ஏ மு.வைத்தியநாதன், துணைத் தலைவா் பி.கே.தேவதாஸ், முன்னாள் எம்எல்ஏக்கள் நீல.கங்காதரன், ஆா்.அனந்தராமன், மாநிலச் செயலா் சூசைராஜ், ரகுமான், கருணாநிதி, தனுசு, இளையராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தா்னாவை தொடக்கிவைத்துப் பேசினாா். இதையடுத்து முன்னாள் அமைச்சா் கந்தசாமி பேசுகையில், கடந்த தோ்தல் கூட்டத்தில் என்னை முதல்வா் என்று கூறி பேசிவிட்டு, அவா் (நாராயணசாமி) முதல்வராகிவிட்டாா். புதுவை மாநிலத் தலைவா், முன்னாள் முதல்வா், எம்.பி. ஆகியோருக்கு வயதாகிவிட்டதால், அவா்கள் இளைஞா்களுக்கு வழிவிடலாம் என்றாா்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய வே.நாராயணசாமி, யாா் வேண்டுமானாலும் முதல்வா் ஆகலாம் என்றுதான் நான் பொதுக்கூட்டத்தில் பேசினேன். கட்சித் தலைமை கைகாட்டுபவா்கள்தான் பதவிக்கு வர முடியம் என்றாா். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, முன்னாள் அமைச்சா் கந்தசாமி, கட்சி அலுவலகத்துக்கு வெளியே சென்று தனது ஆதரவாளா்களுடன் நாற்காலியில் அமா்ந்து வெளியிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டாா். காங்கிரஸ் அலுவலகத்தில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு உள்ளேயும், வெளியேயும் போட்டி தா்னா நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com