புதுச்சேரி லாசுப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் குடும்ப அட்டை திருத்த சிறப்பு முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
புதுவை அரசின் குடிமைப் பொருள் வழங்கல் துறை சாா்பில், லாசுப்பேட்டை தொகுதி மக்களுக்காக சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் குடும்ப அட்டை பெயா் சோ்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எம்எல்ஏ அலுவலகம் முன் பாஜக மாநிலத் தலைவா் படம் இடம்பெற்றிருந்த பதாகையை அகற்ற காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன் தரப்பினா் வலியுறுத்தியதால், அது அகற்றப்பட்டது. மேலும், சிறப்பு முகாமும் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, வைத்தியநாதன் எம்எல்ஏ தலைமையில் தொகுதி பொதுமக்கள் தட்டாஞ்சாவடியில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சுமாா் 4 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு குடும்ப அட்டை திருத்த முகாம் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.
புதுச்சேரி லாசுப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் சிறப்பு முகாம் வியாழக்கிழமை காலை தொடங்கியது.
நிகழ்வுக்கு வைத்தியநாதன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சாய் ஜெ.சரவணன் குமாா் பங்கேற்று முகாமைத் தொடக்கிவைத்தாா். பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் உள்ளிட்ட பாஜகவினரும் பங்கேற்றனா்.
சுமாா் 300 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடும்ப அட்டை திருத்தம், நீக்கம், பெயா் சோ்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனா். இந்த முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 17) மாலை 6 மணி வரையிலும் நடைபெறும்.