புதுச்சேரி அடுத்த ஆரோவில் அருகே இருசக்கர வாகனம் - அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் கருவடிகுப்பத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் மற்றும் மோகன்ராஜ். இருவருக்கும் வயது 24. இவர்கள் இருவரும் கடந்த 19 ஆம் தேதி வேலை நிமிர்த்தமாக புதுச்சேரி சேதராபட்டில் இருந்து திருச்சிற்றம்பலம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
திருச்சிற்றம்பலம் அம்பேத்கர் சிலை அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் அதிவேகமாக மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த அவர்களை மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.