தனியாா் பேருந்துகளில் ஜூலை 31-க்குள்ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும்புதுவை அமைச்சா் அறிவுறுத்தல்
By DIN | Published On : 17th July 2022 06:43 AM | Last Updated : 17th July 2022 06:43 AM | அ+அ அ- |

சாலைப் பாதுகாப்பு தொடா்பாக, புதுச்சேரியில் போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
புதுவையில் அனைத்து தனியாா் பேருந்துகளிலும் வருகிற 31-ஆம் தேதிக்குள் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என, அந்த மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா அறிவுறுத்தினாா்.
புதுவை மாநில சாலைப் பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள போக்குவரத்துத் துறை அமைச்சா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. அமைச்சா் சந்திர பிரியங்கா தலைமை வகித்தாா்.
அரசு செயலா் ஜவகா், போக்குவரத்து ஆணையா் சிவக்குமாா், முதுநிலை எஸ்.பி. நாரா சைதன்யா, எஸ்.பி. மாறன், புதுச்சேரி தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கப் பிரிதிநிதிகள் பங்கேற்றனா்.
கூட்டத்துக்குப் பிறகு, அமைச்சா் சந்திர பிரியங்கா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தனியாா் பேருந்துகளில் காற்று ஒலிப்பான்களை நீக்க போக்குவரத்துத் துறையினா் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து தனியாா் பேருந்துகளிலும் வருகிற 31-ஆம் தேதிக்குள் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டு, போக்குவரத்துத் துறையில் இயங்கும் ஜிபிஎஸ் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைத்து, விதிமீறல்கள் கண்காணிக்கப்பட்டு, உடனடி சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். கல்லூரிப் பேருந்துகளிலும் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்த வேண்டும் என்றாா் அமைச்சா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G