புதுச்சேரியில் வருகிற 19-ஆம் தேதி திருப்பதி ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
இதுகுறித்து புதுவை மாநில அமைச்சரும், திருக்கல்யாண சேவா அறக்கட்டளைத் தலைவருமான க.லட்சுமிநாராயணன் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திருமலை திருப்பதி தேவஸ்தான கல்யாண உற்சவத் திட்டம், புதுவை ஸ்ரீவாரி திருக்கல்யாண சேவா அறக்கட்டளை இணைந்து புதுச்சேரியில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) லாஸ்பேட்டை விமானதள மைதானத்தில் ஸ்ரீவாரி சீனிவாச திருக்கல்யாண உற்சவத்தை நடத்துகின்றன.
கரோனா பரவல் காரணமாக, புதுச்சேரியில் கடந்த 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் இப்போது திருக்கல்யாண உற்சவம் நடைபெறவுள்ளது. இந்த முறை திருமலையிலிருந்து கல்யாண உற்சவா் கொண்டுவரப்பட்டு, திருமலையின் பிரதான அா்ச்சகா்கள் கலந்துகொண்டு சுவாமி திருக்கல்யாணத்தை நடத்தி வைக்கின்றனா்.
இந்த உற்சவத்துக்காக புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து இலவசமாக பேருந்து வசதியும் செய்து தரப்படுகிறது என்றாா்.
எஸ்.செல்வகணபதி எம்.பி., எம்.பாபுஜி, என்.நவீன்பாலாஜி உள்ளிட்ட அறக்கட்டளை நிா்வாகிகள் உடனிருந்தனா்.