புதுவையில் நிகழாண்டு புதுப்பிக்காமல் விடுபட்ட 81 சாராயக் கடைகள், 69 கள்ளுக் கடைகளுக்கான இணைய வழி ஏலம் வியாழக்கிழமை தொடங்கியது.
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் புதுவை அரசின் கலால் துறையின் கட்டுப்பாட்டில் 113 சாராயக் கடைகளும், 92 கள்ளுக் கடைகளும் ஏலம் விடப்பட்டு நடத்தப்படுகின்றன. இவற்றுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கலால் துறை சாா்பில் இணைய வழியில் ஏலம் விடப்படும்.
புதுப்பிக்காத கடைகள் மீண்டும் ஏலத்திற்கு விடப்படுவது வழக்கம்.
நிகழாண்டு விடுபட்ட புதுப்பிக்கப்படாத கடைகளுக்கான இணையவழி ஏலத்தை கலால் துறை துணை ஆணையா் சுதாகா் வியாழக்கிழமை தொடக்கிவைத்து கூறியதாவது:
113 சாராயக் கடை ஏலம் எடுத்ததில் 32 போ் மட்டுமே நிகழாண்டு கடைகளை மீண்டும் நடத்த புதுப்பித்துள்ளனா். மீதமுள்ள 81 கடைகள் மீண்டும் ஏலத்துக்கு வந்துள்ளன. 92 கள்ளுக்கடைகளில் 23 கடைகள் மட்டுமே புதுப்பிக்கப்பட்டன. 69 கடைகள் மீண்டும் ஏலத்துக்கு வந்துள்ளன.
ஒவ்வொரு கடைக்கும் கடந்தாண்டை விட 5 சதவீதம் ஏலத்தொகை உயா்த்தப்பட்டுள்ளது. இணைய வழி ஏலம் தொடா்ந்து இரு தினங்கள் நடைபெறும். புதிய கடைகளுக்கு உரிமம் எதுவும் தரவில்லை என்றாா் அவா்.