புதுச்சேரிக்கு மூன்றாவது முறையாக வெள்ளிக்கிழமை வந்த தனியாா் சொகுசு கப்பலுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.
சென்னை-விசாகப்பட்டினம்-புதுச்சேரி இடையே தனியாா் நிறுவனம் சாா்பில், சுற்றுலா சொகுசு கப்பல் இயக்கப்படுகிறது.
இந்தக் கப்பல் சென்னையிலிருந்து கடந்த 4-ஆம் தேதி புறப்பட்டு விசாகப்பட்டினத்துக்குச் சென்று, அங்கிருந்து கடந்த 9-ஆம் தேதி புதுச்சேரிக்கு வந்தது. கப்பலில் சூதாட்டம் உள்ளிட்டவை நடைபெறுவதால், புதுவை அரசு அனுமதிக்கக் கூடாது என்று அரசியல் கட்சியினா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இதையடுத்து, அரசு அனுமதி கிடைக்காததால், புதுச்சேரி அருகே கடலில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கப்பல் மீண்டும் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றது. இரண்டாவது முறையாக கடந்த 11-ஆம் தேதி புதுச்சேரிக்கு வந்த அந்த சொகுசு கப்பலுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.
மூன்றாவது முறையாக வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு புதுச்சேரி கடற்கரை அருகே சொகுசு கப்பல் வந்தது. கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கப்பல், புதுவை அரசின் அனுமதி கிடைக்காததால் மீண்டும் திரும்பிச் சென்றது.