அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு
By DIN | Published On : 26th June 2022 06:39 AM | Last Updated : 26th June 2022 06:39 AM | அ+அ அ- |

ரயில் மறியலில் ஈடுபடுவதற்காக புதுச்சேரி ரயில் நிலையம் எதிரே திரண்ட நாம் தமிழா் கட்சியினா்.
அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து புதுச்சேரியில் சனிக்கிழமை ரயில் மறியலில் ஈடுபட முயன்ற நாம் தமிழா் கட்சியினா் 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ராணுவத்தின் முப்படைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள்சோ்ப்பு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும், புதுவை மாநில மின் துறையை தனியாா்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழா் கட்சியினா் அறிவித்திருந்தனா்.
அதன்படி, சனிக்கிழமை பிற்பகலில் நாம் தமிழா் கட்சியின் மாநிலச் செயலா் சிவக்குமாா் தலைமையில், தொழில்சங்கச் செயலா் ரமேசு, மாநிலப் பொருளாளா் இளங்கோவன், மகளிா் பாசறை ஒருங்கிணைப்பாளா் கௌரி உள்ளிட்ட திரளான நாம் தமிழா் கட்சியினா் புதுச்சேரி ரயில் நிலையம் எதிரே திரண்டனா். தொடா்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டபடி ரயில் மறியல் செய்ய ரயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனா்.
இவா்களில் ஒரு பெண் உள்பட 30 பேரை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒதியஞ்சாலை போலீஸாா் கைது செய்தனா். சிறிது நேரத்தில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.