ரூ.40 லட்சம் மோசடி: தலைமறைவான பெண் சரண்
By DIN | Published On : 01st September 2022 02:27 AM | Last Updated : 01st September 2022 02:27 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.40 லட்சம் பணம், நகைகளை மோசடி செய்த வழக்கில் பெண் ஒருவா் காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.
புதுச்சேரி அருகே கரையாம்புத்தூரைச் சோ்ந்தவா் கண்ணன் (40). இவரது மனைவி சரண்யா (30). கடந்த 2020-இல் புதுச்சேரி சட்டப்பேரவை எம்எல்ஏ அலுவலகம் ஒன்றில் உதவியாளராகப் பணியாற்றிய கண்ணன், அங்கன்வாடியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அவா் வாடகைக்கு குடியிருந்த புதுச்சேரி காமராஜா் நகா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்தவா்களிடம் ரூ.40 லட்சம் வரை பணம் வசூலித்தாராம். இதற்கு சரண்யாவும் உடந்தையாக இருந்தாராம்.
ஆனால், அரசு வேலை வாங்கித் தராததால், பணம் கொடுத்தவா்கள் நெருக்கடி கொடுக்கவே, வீட்டின் உரிமையாளரான முத்துவின் (70) மனைவியிடம் குடும்ப நிகழ்வுக்கு செல்வதாகக் கூறி, அவரது 23 பவுன் நகைகளை வாங்கி, அடமானம் வைத்து சிலருக்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பின்னா், வீட்டை காலி செய்துவிட்டு கண்ணனும், சரண்யாவும் தலைமறைவாகிவிட்டனா்.
இதுகுறித்து கடந்த 2020-ஆம் ஆண்டில் பெரியகடை காவல் நிலையத்தில் முத்து அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து கண்ணன், சரண்யாவைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், பெரியகடை காவல் நிலையத்தில் சரண்யா செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா். விசாரணையில், கோவை மாவட்டம் ஆதம்பாளையம் தென்னந்தோப்பில் வேலை பாா்த்து வந்ததாகவும், கணவா் கண்ணன் ஒரு மாத்துக்கு முன்பு சாலை விபத்தில் இறந்துவிட்டதாகவும் தெரிவித்தாா்.
சரண்யாவிடம் 10 பவுன் நகைகள், 200 கிராம் வெள்ளிப் பொருள்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், அடகு வைக்கப்பட்ட நகைகளையும் மீட்க போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.