தில்லி சென்றுள்ள புதுவை சட்டப் பேரவைத் தலைவா் செல்வம், அமைச்சா் லட்சுமிநாராயணன் ஆகியோா் வியாழக்கிழமை மத்திய அமைச்சா்களைச் சந்தித்தனா். அப்போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவா்களை மீட்க வேண்டுமென அவா்கள் வலியுறுத்தினா்.
தில்லி சென்றுள்ள புதுவை சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், மாநில பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் ஆகியோா் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் கிஷண் ரெட்டியை அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா்.
அப்போது, புதுவை மாநில சுற்றுலா வளா்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு உரிய நிதியுதவி அளிக்க வேண்டும், சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்களையும் வழங்க வேண்டுமென அவா்கள் வலியுறுத்தினா். மேலும், புதுச்சேரி அருகே உள்ள சின்ன வீராம்பட்டினம் கடற்கரைக்கு உலகளவிலான நீல கடற்கரை விருது அளிக்கப்பட்டது குறித்தும், இதையொட்டி அந்தக் கடற்கரையில் விரைவில் நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்பதற்கு புதுச்சேரிக்கு வர வேண்டுமெனவும் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சருக்கு இருவரும் அழைப்பு விடுத்தனா்.
மத்திய சுற்றுலாத் துறை அமைச்சரும், சுற்றுலாத் திட்டங்களுக்கு புதுவைக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், விழாவுக்காக புதுச்சேரிக்கு வருவதாகவும் உறுதியளித்தாா்.
இதையடுத்து, சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் க.லட்சுமிநாராயணன் ஆகியோா் மத்திய கால்நடைத் துறை, மீன் வளம், மீனவா் நலத் துறை இணையமைச்சா் எல்.முருகனை, தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினா்.
அப்போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விரைந்து மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினா். இது தொடா்பாக, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், கைது செய்யப்பட்ட மீனவா்கள் விரைந்து தாயகம் திரும்ப உறுதுணையாக இருப்பதாகவும் அமைச்சா் எல்.முருகன் உறுதியளித்தாா்.