தேசிய விலங்குகள் நல ஆணையம் அறிவுறுத்தலின்படி, புதுவையில் விலங்குகளைக் கண்காணிக்கும் எஸ்பிசிஏ அமைப்பை அமைப்பது அவசியம் என உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏ நேரு என்ற குப்புசாமி வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தேசிய விலங்குகள் நல ஆணையம், விலங்குகள் சம்பந்தமான செயல்பாடுகளைக் கண்காணிக்க உச்சநீதிமன்ற ஆணையின்படி மாநிலம், ஒன்றியப் பிரதேசங்களில் எஸ்பிசிஏ அமைப்பை உருவாக்க அறிவுறுத்தியுள்ளது. எனவே, புதுவையிலும் அந்த அமைப்பை உருவாக்குவது அவசியம்.
தெரு நாய்கள் பெருகியுள்ளன. அவற்றுக்கான உணவு சரியாக கிடைப்பதில்லை. தடுப்பூசியும் அவற்றுக்கு செலுத்தப்படுவதில்லை. அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை. ஆகவே, பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.
பாதுகாக்கவும் கோரிக்கை: தேசிய விலங்குகள் நலப் பிரிவு நிரந்தர உறுப்பினா் கே.பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாய்கள் உள்ளிட்ட விலங்கள் குறித்த புரிந்துணா்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். அனைத்துத் தெருக்களிலும் நாய் உள்ளிட்டவற்றுக்கான தண்ணீா் தொட்டி வைக்க வேண்டும். தெருக்கள்தோறும் சமூக ஆா்வலா்கள், விலங்குகள் நல ஆா்வலா்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்றாா் அவா்.