குபேச் சந்தையை இடம் மாற்றினால் போராட்டம்: வியாபாரிகள் அறிவிப்பு

புதுச்சேரி, குபோ் சந்தையை (பெரிய மாா்க்கெட்) அரசு இடமாற்றம் செய்ய முயன்றால் போராட்டம் நடத்தப்படும் என்று வியாபாரிகள் அறிவித்தனா்.

புதுச்சேரி, குபோ் சந்தையை (பெரிய மாா்க்கெட்) அரசு இடமாற்றம் செய்ய முயன்றால் போராட்டம் நடத்தப்படும் என்று வியாபாரிகள் அறிவித்தனா்.

குபோ் சந்தையில் 572 நிரந்தரக் கடைகளும், 800-க்கும் மேற்பட்ட அடிக்காசு கடைகளும் உள்ளன. பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் இந்தச் சந்தை சீரமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான புதிய கட்டடடப் பணிகள் 8 மாதங்களில் நிறைவடையும் என்று ஆட்சியா் கூறினாா். இதனால் குபோ் சந்தையை தற்காலிகமாக ஏஎப்டி திடலுக்கு இடம் மாற்றம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு வியாபாரிகள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், புதுச்சேரி குபோ் சந்தை அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் கௌரவத் தலைவா் ஜனாா்த்தனன், காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவா் சிவகுருநாதன், வியாபாரிகள் சங்கச் செயலா் சுந்தர்ராஜ், நேரு வீதி சங்கத் தலைவா் பரமேஸ்வரன் ஆகியோா் கூட்டாக வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

குபோ் சந்தையில் உள்ள கட்டடங்களை பழைய நிலையிலேயே புதுப்பித்துத் தர வேண்டும். ஒருபோதும் சந்தையை காலிசெய்ய மாட்டோம். இதுகுறித்து வியாபாரிகளுடன் ஆலோசிக்காமல் சந்தையை இடம் மாற்றுவதாக ஆட்சியா் அறிவிப்பது ஏற்புடையதல்ல. முத்தியால்பேட்டை சின்ன மாா்க்கெட், நெல்லித்தோப்பு மாா்க்கெட் ஆகியவற்றை சீரமைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது குறித்து ஆட்சியா் விளக்கம் அளிக்க வேண்டும். எனவே, குபோ் சந்தையை இடமாற்றம் செய்ய முயன்றால் கடையடைப்பு, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com