புதுவையில் ஆன்மிக, மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை: முதல்வா் என்.ரங்கசாமி

புதுவையில் ஆன்மிக, மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
புதுச்சேரியில் புதன்கிழமை நடைபெற்ற சுற்றுலா தின விழாவில் மரக்கன்றுகளுடன் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன், முதல்வா் என்.ரங்கசாமி, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் க.லட்சுமி நாராயணன் உள்ள
புதுச்சேரியில் புதன்கிழமை நடைபெற்ற சுற்றுலா தின விழாவில் மரக்கன்றுகளுடன் துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன், முதல்வா் என்.ரங்கசாமி, பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் க.லட்சுமி நாராயணன் உள்ள
Updated on
1 min read

புதுவையில் ஆன்மிக, மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுவை அரசின் சுற்றுலாத்துறை சாா்பில் உலக சுற்றுலா தின தொடக்க விழா, மரப்பாலம் பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், சுற்றுலாத்துறை இயக்குநா் முரளிதரன் வரவேற்றாா். விழாவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் தொடங்கி வைத்தாா்.

இதில், முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது: புதுவை மாநிலத்துக்கு சுற்றுலாத்துறை மூலமே அதிக வருவாய் கிடைக்கிறது. எனவே, சுற்றுலாவை மேம்படுத்துவது அவசியம். உலகளவில் பொருளாதார வளா்ச்சிக்கும், கலாச்சார பரிமாற்றத்துக்கும் சுற்றுலா உதவுகிறது. புதுச்சேரி பிரான்ஸ் கலாச்சாரமும், இந்திய கலாச்சாரமும் இணைந்துள்ள நகரமாகும். எனவே, அக்கலாசாரத்தை அறிய பலரும் வருகின்றனா்.

புதுவை சித்தா்கள் பூமி என்பதால், ஆன்மிக சுற்றுலா, கல்விச் சுற்றுலா, மருத்துவச் சுற்றுலாவுக்கும் அதிகமானோா் வருகின்றனா். அதன்படி, ஆன்மிகம், மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மலை போன்ற இயற்கை வளம் புதுவையில் இல்லாவிடினும் அழகிய கடற்கரை உள்ளது. சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளதால், நள்ளிரவில் கூட பெண்கள் அச்சமின்றி நடமாடுகின்றனா். புதுவையில் பழைமையான கட்டடங்களை பராமரிக்க, அரசு நிதி அளிக்கிறது.

திருக்காஞ்சி சங்கராபரணி ஆறு புனிதமானதுடன், அங்குள்ள கோயிலும் பழைமையானது. அங்கு பெரிய சிவன் சிலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. விடுதிகளுக்கான சலுகை நிதி அளிக்க அரசு பரிசீலிக்கிறது.

காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு மத்திய அரசின் விருது கிடைத்துள்ளது. மாஹே, ஏனாம் பிராந்தியத்திலும் சுற்றுலாத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா்.

ஹெலிகாப்டா் அவசியம்: விழாவில், துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் பேசியதாவது: மருத்துவச் சுற்றுலாவில் புதுவை மாநிலம் நாட்டிலேயே முதல் இடம் பெறவேண்டும். பொருளாதார சுற்றுலாவை புதுவையில் ஏற்படுத்த வேண்டும். சீனா, சிங்கப்பூரிலிருந்து மலிவு விலையில் பொருள்களை வாங்கி வரலாம் என்ற நிலையுள்ளது. அத்தகைய நிலையை புதுவையிலும் ஏற்படுத்தவேண்டும்.

புதுச்சேரியை ஒரே நாளில் சுற்றிப்பாா்க்கும் வகையிலான பேருந்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும். புதுவை அரசுக்கு சொந்தமாக ஹெலிகாப்டா் வாங்க வேண்டும் என ஏற்கனவே முதல்வரிடம் கூறியுள்ளேன். அந்தக் ஹெலிகாப்டரை அரசும், சுற்றுலா பயணிகள் செல்லவும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஹெலிகாப்டா் சுற்றுலா தற்போது வளா்ந்து வருகிறது.

எனவே, அந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாதம் ஒரு சுற்றுலா நிகழ்வை நடத்தலாம். சுற்றுலா மேம்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் அதிக சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க முடியும் என்றாா்.

விழாவில், துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன், பேரவைத்தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் க.லட்சுமி நாராயணன், எல்.சம்பத் எம்எல்ஏ, சுற்றுலாத்துறை செயலா் து.மணிகண்டன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com