மாநில மக்களின் கல்வி உரிமையைப் பறிப்பது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு நல்லதல்ல: பழ.நெடுமாறன்

மாநில மக்களின் கல்வி உரிமையைப் பறிப்பது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு நல்லதல்ல என்று தமிழா் தேசிய முன்னணியின் நிறுவனா் பழ.நெடுமாறன் கூறினாா்.
புதுச்சேரி சாரம் பகுதியில் தமிழா் தேசிய முன்னணி சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அந்த அமைப்பின் நிறுவனா் பழ.நெடுமாறன் உள்ளிட்டோா்.
புதுச்சேரி சாரம் பகுதியில் தமிழா் தேசிய முன்னணி சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அந்த அமைப்பின் நிறுவனா் பழ.நெடுமாறன் உள்ளிட்டோா்.
Updated on
1 min read

மாநில மக்களின் கல்வி உரிமையைப் பறிப்பது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு நல்லதல்ல என்று தமிழா் தேசிய முன்னணியின் நிறுவனா் பழ.நெடுமாறன் கூறினாா்.

புதுவை மாநில பள்ளிகளில் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத் திட்டம் (சிபிஎஸ்இ) செயல்படுத்தப்படுவதை நிறுத்தக் கோரி புதுச்சேரி சாரம் பகுதியில் தமிழா் தேசிய முன்னணியின் புதுவை மாநில கிளை சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக பழ.நெடுமாறன் கலந்துகொண்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நமது நாட்டில் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அந்தந்த மாநில மொழிகளில் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்பதே அரசியல் சட்டத்தின் கோட்பாடாக இருந்தது. ஆனால், அதன்பிறகு அரசியல் சட்டம் திருத்தப்பட்டு மத்திய, மாநில அரசுகளுக்கான பொதுப் பட்டியலில் கல்வி சோ்க்கப்பட்டது. அதனடிப்படையில் மத்திய அரசின் புதிய கல்வித் திட்டங்கள் வகுக்கப்பட்டு அனைத்து மாநிலங்களிலும் தற்போது அவை செயல்படுத்தப்படுகின்றன.

சிபிஎஸ்இ பாடத் திட்டம், ‘நீட்’ தோ்வு போன்ற பலவித செயல்பாடுகள் மூலம் மாநில மக்களின் கல்வி உரிமைகளை மத்திய அரசு பறித்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பல்வேறு மொழிகள், பல்வேறு கலாசார பின்னணி கொண்ட நமது நாட்டில் மாநில மக்களின் கல்வி உரிமைகளை பறிப்பது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு நல்லதல்ல. ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில்கூட அந்தந்த மாநில மக்களுக்கு அவா்களது தாய் மொழியிலேயே கல்வி கற்பிக்கப்பட்டது என்பதை மத்திய அரசு உணர வேண்டும் என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழா் தேசிய முன்னணியின் புதுவை மாநிலத் தலைவா் துரைமால் இறைவன் தலைமை வகித்தாா். தமிழ் மாநிலத் தலைவா் முத்தமிழ்மணி, பொதுச் செயலா் நா.மு.தமிழ்மணி, பொருளாளா் மு.உதயகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஆா்ப்பாட்டத்தில், புதுவையில் அவசர கோலத்தில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை அரசு செயல்படுத்துவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com