புதுவையிலும் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு: முதல்வா் என்.ரங்கசாமி
By DIN | Published On : 06th June 2023 12:00 AM | Last Updated : 06th June 2023 12:00 AM | அ+அ அ- |

தமிழகத்தைப் போல, புதுவையிலும் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அனைத்து வகை பள்ளிகளும் வருகிற 14-ஆம் தேதி திறக்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
புதுவையில் கோடை வெப்பம் அதிகரித்ததால், பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. அதன்படி, ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கத்திரி வெயில் நிறைவடைந்தும் புதுவையில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. எனவே, மாணவா்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பை மீண்டும் தள்ளிவைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
புதுச்சேரி கம்பன் கலையரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில் பங்கேற்ற முதல்வா் என்.ரங்கசாமியிடம் பள்ளிகள் திறப்பு குறித்து கேட்டபோது அவா் கூறியதாவது:
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தமிழகத்தைப் போல, புதுவையிலும் பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அனைத்து வகை பள்ளிகளும் வருகிற 14-ஆம் தேதி திறக்கப்படும்.
அதிகாரிகள் மீதான குறைகளை சட்டப்பேரவை உறுப்பினா் தெரிவித்துள்ளாா். அவரது தொகுதியிலுள்ள பிரச்னைகளையும் தெரிவித்தாா். புதுவையில் நல்லாட்சி நடத்த வேண்டும். திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்பதே அரசின் எண்ணமாகும் என்றாா் முதல்வா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...