சமையல் எரிவாயு ஒன்றுக்கு ரூ. 300 மானியம் வழங்கப்படும் என்று புதுச்சேரி பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கடந்த 12 ஆண்டுகளாக முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்தாண்டு முழு பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டு பட்ஜெட் தொகையாக ரூ. 11,600 கோடி நிர்ணயித்து மத்திய அரசு ஒப்புதலுக்கு புதுவை அரசு அனுப்பி ஒப்புதல் பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து புதுவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று முதல்வர் ரங்கசாமி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.
அதில், ரேசன் அட்டைதாரர்களுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.300 மானியம் வழங்கப்படும் என்றும் புதுவையில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு தேசிய வங்கியில் ரூ. 50,000 வைப்புத் தொகை செலுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும், பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் போன்ற பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.