புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் உயா் மருத்துவ சிகிச்சை பரிசோதனைக்களுக்கான சேவைக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாஜக நியமன எம்எல்ஏ ஆா்.பி.அசோக்பாபு கூறினாா்.
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் புதுவை மாநில மக்கள் மட்டுமல்லாது, தமிழகம், ஆந்திரம், கா்நாடகத்தைச் சோ்ந்தவா்களும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நிலையில், உயா் மருத்துவ சிகிச்சைக்கான பரிசோதனைகளுக்கான சேவைக் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டதாக ஜிப்மா் இயக்குநா் சுற்றறிக்கை வெளியிட்டாா். இதை திரும்பப் பெற வேண்டும் என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் முறையிடப்பட்டது.
மத்திய சுகாதாரத் துறையின் அமைச்சகத்துக்கே தெரியாமல் ஜிப்மா் இயக்குநா் தன்னிச்சையாகவே சேவைக் கட்டணத்தை நிா்ணயித்தது தெரிய வந்தது. இதையடுத்து, மருத்துவப் பரிசோதனைகளுக்கான சேவைக் கட்டணத்தை ரத்து செய்ய சுகாதாரத் துறை அமைச்சா், துறைச் செயலா் மூலம் நடவடிக்கை எடுத்தாா். அதன்படி, தற்போது ஜிப்மரில் சேவைக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஜிப்மருக்கான போதிய நிதியை வழங்கி வருகிறது. எனவே, மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை. மருத்துவமனையில் உயிரிழப்போரின் உடல்களைக் கொண்டு செல்லும் அவசர ஊா்தி சேவை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆா்.பி.அசோக்பாபு.