புதுவை மாநிலத்தில் மருத்துவக் கல்வி முதலாமாண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தாமதம் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து புதுச்சேரியில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவை மாநிலத்தில் சென்டாக் மாணவா் சோ்க்கையில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய மருத்துவக் குழுவானது செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் கலந்தாய்வு முடிந்துள்ளதாக அறிவித்த நிலையில், புதுவையில் மருத்துவக் கல்வி முதலாமாண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தாமதமாக நடத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சுகாதாரத் துறை செயலா் திட்டமிட்டே தனியாா் மருத்துவக் கல்லூரிகள் பயனடையும் வகையில் செயல்பட்டுள்ளாா். அதனால் சுமாா் 441 மாணவா்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, மருத்துவக் கல்வியில் தாமதமாக மாணவா்கள் சோ்க்கப்பட்டதற்கு அனுமதி கோரி முதல்வா் கடிதம் எழுதி உள்ளதாகத் தெரிகிறது.
எனவே, இந்த பிரச்னையில் துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் மாணவா்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் தெளிவான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.