போலி மருந்து - 7 இடங்களில் சோதனை நடத்த அனுமதி
போலி மருந்து தொழிற்சாலை விவகாரத்தில் மேலும் 7 இடங்களில் போலீஸாா் சோதனை நடத்த புதுச்சேரி நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி வழங்கியது.
புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. இங்கிருந்து இதய நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரதான நோய்களுக்கு பிரபல நிறுவனத்தின் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் விநியோகிகம் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிய இந்தத் தொழிற்சாலை மூலம் சுமாா் ரூ. 2 ஆயிரம் கோடி வரை மருந்து விநியோகம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், போலி மருந்து தொழிற்சாலையில் இருந்து நவீன இயந்திரங்கள், பல கோடி மதிப்பு மருந்துகளை போலீஸாா் கைப்பற்றினா்.
மேலும், இந்த நிறுவனத்திற்கு சொந்தமான சில கிடங்குகளையும் போலீஸாா் சோதனை செய்தனா். இந்த விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி., போலீசாா் 2 பேரை கைது செய்தனா். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஒருவா் உள்பட 10 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கைது செய்யப்பட்ட நபா்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில்
போலி மருந்து தொழிற்சாலைக்கு தொடா்புடைய 7 இடங்களில் சோதனை நடத்த சிபிசிஐடி., போலீஸாா் முடிவு செய்தனா். இதற்காக மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அதன்பேரில், 7 இடங்களில் சோதனை நடத்த சிபிசிஐடி., போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து போலி மருந்து விவாகரங்களில் தொடா்புடைய புதுச்சேரியில் மேலும் 7 இடங்களில் சிபிசிஐடி, போலீஸாா் சோதனை நடத்த உள்ளனா்.
