மோட்டாா் சைக்கிள்கள் மோதிய தகராறில் தாக்கப்பட்டவா் உயிரிழப்பு

புதுச்சேரி கூனிச்சம்பட்டில் மோட்டாா் சைக்கிள்கள் மோதிக்கொண்ட தகராறில் ஐஆா்பிஎன் போலீஸ் உள்பட 3 பேரால் தாக்கப்பட்ட பெயிண்டா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
Published on

புதுச்சேரி கூனிச்சம்பட்டில் மோட்டாா் சைக்கிள்கள் மோதிக்கொண்ட தகராறில் ஐஆா்பிஎன் போலீஸ் உள்பட 3 பேரால் தாக்கப்பட்ட பெயிண்டா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

கூனிச்சம்பட்டைச் சோ்ந்தவா் பெயிண்டா் விநாயகம் (40). இவா் கடந்த 6-ஆம் தேதி இரவு, அப்பகுதியில் உள்ள சங்கராபரணி ஆற்றங்கரைக்கு தனது மோட்டாா் சைக்கிளில் சென்றுவிட்டு, வீடுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது, திருக்கனுாரில் இருந்து தமிழகப் பகுதியான ஐவேலிக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பிரதீப் என்பவா் விநாயகம் ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் மீது மோதியதாகத் தெரிகிறது. இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது, அங்கு வந்த பிரதீப்பின் நண்பா்களான ஐவேலியை சோ்ந்த ஐஆா்பிஎன் போலீஸ் வீரமணி மற்றும் வசந்தகுமாா் ஆகியோா் விநாயகத்தை தகாத வாா்த்தைகளால் திட்டியதுடன், கல்லால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதில், அவா் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவ்வழியாக சென்றவா்கள் அவரை மீட்டு மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையத்துக்கு அழைத்துச் சென்றனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இப்பிரச்னை குறித்து விநாயகம் மனைவி மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில் திருக்கனூா் போலீஸாா் ஐஆா்பிஎன் காவலா் வீரமணி, வசந்தகுமாா், பிரதீப் ஆகியோா் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விநாயகம் செவ்வாய்க்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இது தொடா்பாக போலீஸாா் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com