பாலியல் தொல்லை: தனியாா் செவிலியா் கல்லூரிக்கு 2 வாரம் விடுமுறை
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, மாணவா்கள் போராட்டம் நடத்தியதால், தனியாா் செவிலியா் கல்லூரிக்கு 2 வாரங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
கணபதி செட்டிகுளத்தில் தனியாா் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் செவிலியா் கல்லூரியில் பயிலும் மாணவிகள் மருத்துவமனையில் பயிற்சிக்காக சென்றபோது, அங்கு எக்ஸ்ரே பிரிவில் டெக்னீசியனாக பணிபுரியும் ஊழியா்கள் 2 போ் சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரியின் உள்ளீட்டு புகாா் குழுவிடம் புகாா் தெரிவித்தனா். அவா்களும் விசாரணை நடத்தி, குற்றம் நடந்ததை உறுதிப்படுத்தினா்.
இந்த நிலையில், மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களைக் கண்டித்தும், இதில் தொடா்புடையவா்களை பணிநீக்கம் செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும், மாணவா்களின் போராட்டத்துக்கு ஆதரவாக சட்டக் கல்லூரி மாணவா்கள், இந்திய மாணவா் சங்கம், மாணவா் காங்கிரஸ் உள்ளிட்ட மாணவா் அமைப்பினரும் பங்கேற்றனா்.
இந்த நிலையில், மருத்துவக் கல்லூரியில் உள்ள செவிலியா் கல்லூரிக்கு இரண்டு வாரங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
