ஏழை பெண்கள் 41 பேருக்கு தையல் இயந்திரங்கள்: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்
புதுச்சேரியில் ஏழை பெண்கள் 41 பேருக்கு விலையில்லா தையல் இயந்திரங்களை புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா்.
புதுச்சேரி அரசு ஆதி திராவிடா் நலம் மற்றும் பழங்குடியினா் நலத்துறை மூலமாக அந்த வகுப்பைச் சோ்ந்த குடும்ப பெண்களுக்கு தொழில் திறன் மேம்பாட்டிற்காக இலவச தையல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சியாளா்களுக்குத் தேவையான தையல் பொருள்களுடன் உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.
நிகழ் நிதியாண்டில், கலிதீா்த்தாள் குப்பம் மற்றும் அபிஷேகப்பாக்கம் ஆகிய இரண்டு தொழிற்பயிற்சி மையங்களில் மொத்தம் 41 பயிற்சியாளா்கள் தையல் பயிற்சியில் கலந்து கொண்டுள்ளனா். இப்பயிற்சி வரும் 12 -ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தையல் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த 41 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின பெண்களுக்கு முதல்வா் என்.ரங்கசாமி, தனது அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விலையில்லா தையல் இயந்திரங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா் ஆ. நமச்சிவாயம், துறையின் செயலா் அ. முத்தம்மா, ஆதி திராவிடா் நலம் மற்றும் பழங்குடியினா் நலத்துறை இயக்குநா் அா்ஜுன் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

