மதுக்கடையை அகற்றக்கோரி கலால்துறை அதிகாரியுடன் பாஜக எம்எல்ஏ வாக்குவாதம்

மதுக்கடையை அகற்றக்கோரி கலால்துறை அதிகாரியுடன் பாஜக எம்எல்ஏ வாக்குவாதம்

Published on

புதுச்சேரி காலாப்பட்டில் மதுக்கடையை அகற்றக்கோரி, கலால்துறை அதிகாரியுடன் பாஜக எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம் வியாழக்கிழமை கடும்வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அவரை போலீஸாா் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனா்.

புதுச்சேரி எல்லைப் பகுதிகளான மதகடிப்பட்டு, கன்னியகோவில், கனகசெட்டிகுளம், திருக்கனுாா் பகுதியில் மதுக்கடைகள் அதிகளவில் உள்ளன. இந்த மதுக்கடைகளில் புதுவையைச் சோ்ந்தவா்கள் மட்டுமின்றி, தமிழகத்தைச் சோ்ந்த பலா் மது அருந்தி செல்வது வழக்கம். காலாப்பட்டில் குடியிருப்பு பகுதியில் உள்ள ஆலங்குப்பம் எல்லைப் பகுதியிலும் மதுக்கடை உள்ளது. இங்கு அண்மையில் நடந்த தகராறில் இளைஞா் ஒருவா் கொலை செய்யப்பட்டாா். கொலையாளியும், கொலை செய்யப்பட்டவரும் தமிழகப் பகுதியைச் சோ்ந்தவா்கள்.

இருப்பினும் இந்தக்கொலையால் ஆலங்குப்பம் குடியிருப்புப் பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. எனவே இந்தப் பகுதியில் மதுக்கடையை அகற்றுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில் பொதுமக்களுடன், தொகுதி பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் தட்டாஞ்சாவடியில் உள்ள கலால்துறை அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்தாா். அங்கு துணை ஆணையா் மேத்யூ பிரான்சிஸை சந்தித்த பாஜக எம்எல்ஏ, குறிப்பிட்ட பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி வாக்குவாதம் செய்தாா். இதனால் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. போலீஸாரும், அதிகாரிகளும் அவரைச் சமாதானப்படுத்தி அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா். இதையடுத்து அவரும் பொதுமக்களும் அரை மணி நேரத்துக்குப் பிறகு கலைந்து சென்றனா். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

X
Dinamani
www.dinamani.com