செட்டிப்பட்டு கோயில் கும்பாபிஷேக விழா! துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!
திருக்கனூா் அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றாா்.
திருக்கனுாா் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதியம்மன் கோயிலில் மாரியம்மன், விநாயகா், முருகன், காளியம்மன், ஏழை மாரியம்மன், ஐயனாரப்பன் சந்நிதிகள் அமைந்துள்ளன.
இந்தக் கோயில்களின் மகா கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள், கடந்த 6-ஆம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. சனிக்கிழமை மாலை விக்னேஸ்வர பூஜை, கலாகா்ஷணம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, வேதிகா பூஜை, வேத பாராயணம், யாக வேள்வி ஆரம்பம், நாட்டு மருந்து மூலிகையால் யாக வேள்வி, மகா தீபாராதனை நடைபெற்றது.
முக்கிய நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை காலை கோபூஜை, இரண்டாம் கால யாக பூஜை ஆரம்பம், நாடி சந்தானம், யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து திரௌபதியம்மன், மாரியம்மன் உள்ளிட்ட 8 கோயில் சந்நிதிகளில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில், துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், மாநில உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், முன்னாள் எம்எல்ஏ அருள்முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

