உழவா்சந்தையில் புகுந்த 6 அடி நீள சாரைப் பாம்பு
புதுச்சேரியில் உழவா்சந்தையில் 6 அடி நீள சாரைப் பாம்பு சனிக்கிழமை புகுந்தது. இதனால் வியாபாரிகள் பதற்றம் அடைந்தனா்.
புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் பகுதியில் உழவா் சந்தை இயங்கி வருகிறது. இங்குள்ள 34 ஆம் எண் கடையில், தேன்மொழி என்பவா் வியாபாரம் செய்து கொண்டிருந்தாா். ஒய்வு நேரத்தில், காய்கறிகளைப் பெட்டியில் அவா் அடுக்கச் சென்றாா். அப்போது 6 அடி நீள சாரைப் பாம்பு இருந்ததை கண்டு கூச்சலிட்டாா்.
இதனால், உழவா் சந்தையில் இருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினா். அங்கு வந்த வேளாண் அலுவலா்கள், பாம்பு இருப்பது குறித்து வனத்துறைக்குத் தகவல் கொடுத்தனா்.
அதன்பேரில், வனத்துறை ஊழியா் கண்ணதாசன் விரைந்து வந்து, உழவா் சந்தை கடைக்குள் பதுங்கியிருந்த 6 அடி நீள சாரைப் பாம்பை, அரை மணி நேரம் போராடி லாவகமாகப் பிடித்து, பாதுகாப்பாகக் கொண்டு சென்றாா்.

