பழைய பொருள்களை வீடு, வீடாக வாகனத்தில் சென்று சேகரிக்கும் பணி: உழவா்கரை நகராட்சியில் இன்று தொடக்கம்
பழையப் பொருள்களை வாகனத்தில் சேகரிக்கும் நடவடிக்கையில் உழவா்கரை நகராட்சி ஈடுபடுகிறது.
இது குறித்து உழவா்கரை நகராட்சி ஆணையா் சுரேஷ்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு வீடுகளில் உள்ள பயனற்ற பழைய மெத்தைகள், சோபாக்கள், படுக்கைகள் மற்றும் பழுதடைந்த மின்சாதன பொருள்கள் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி போன்றவற்றை சாலைகள் குப்பை தொட்டிகளில் போடுவதால், தினசரி குப்பைகள் எடுத்து செல்லும் பணி பாதிக்கப்படுகிறது.
எனவே, இதனைத் தவிா்க்கும் பொருட்டு உழவா்கரை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஜன. 7- முதல் 13- ஆம் தேதி வரை மொத்த கழிவுகளை நகராட்சி வாகனம் மூலம் ஒவ்வொரு வாா்டு பகுதியாக தனியாக சேகரிக்கப்பட உள்ளது. இதன் விவரங்களை நகராட்சி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
வீடுகளில் மேற்கூறிய பயனற்ற பொருள்கள் இருந்தால் அவற்றை சாலைகளில், குப்பை தொட்டி அருகில் போடாமல் நகராட்சி கட்டுப்பாட்டு அறை 0413- 2200382 மற்றும் வாட்ஸ் ஆப் 75981 71674 எண்ணுக்கு மற்றும் க்ரீன் வாரியா் நிறுவனத்தின் 91183 83911 புகாா் எண்ணுக்கு முகவரியுடன் தகவல் தெரிவித்தால் வீடுகளுக்கே வந்து பெற்றுக் கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளாா்.

