உளுந்தூர்பேட்டை வட்டம், மலட்டாறில் சாத்தனூர் அணையிலிருந்து 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து, மக்கள் பாதுகாப்பு கவசம், அப்பகுதி விவசாயிகள் சார்பில், அரசூர் நான்குமுனை சந்திப்பில் புதன்கிழமை காலை 11 மணியளவில் சாலை மறியல் நடைபெறுவதாக இருந்தது.
இதையறிந்த உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட்சியர் எஸ்.பாலசுப்பிரமணியன் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
கூட்டத்துக்கு டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் ஜோகிந்தர், உளவுப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் முருகன், மண்டலத் துணை வட்டாட்சியர் சங்கரலிங்கம் மற்றும் மக்கள் பாதுகாப்பு கவசம் அமைப்பின் மாவட்டக் குழுவைச் சேர்ந்த தேவராஜன் தலைமையில் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, சாத்தனூர் அணையிலிருந்து மலட்டாறு வாய்க்காலுக்கு 500 கன அடி நீரை திறந்து விடுகின்றனர்.
இந்த நீரை உயர்த்தி 1,000 கன அடியாக திறந்துவிடக் கோரி மக்கள் பாதுகாப்பு கவசம் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு வட்டாட்சியர், கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.
வட்டாட்சியரின் உறுதிமொழியை ஏற்று விவசாயிகள், அமைப்பினரும் அங்கிருந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.