விழுப்புரத்தில் அரசுப் பேருந்து ஜப்தி
By DIN | Published On : 17th April 2019 06:43 AM | Last Updated : 17th April 2019 06:43 AM | அ+அ அ- |

விபத்து இழப்பீடுத் தொகை முழுவதும் வழங்காததால், அரசுப் பேருந்தை விழுப்புரத்தில் நீதிமன்ற ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்தனர்.
விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் மித்ரா(16). இவர்
கடந்த 9.8.2009 அன்று சென்னையிலிருந்து விழுப்புரத்துக்கு உறவினர்களுடன் அரசுப் பேருந்தில் பயணித்தார். விழுப்புரம் சிக்னல் பகுதியில் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கினார். அப்போது, மித்ரா இறங்குவதை கவனிக்காமல், பேருந்தை ஓட்டுநர் இயக்கியதால், தவறி கீழே விழுந்த மித்ராவின் இடது கால் பேருந்து சக்கரத்தில் சிக்கியது. இந்த விபத்தில் மித்ராவின் இடதுகால் அகற்றப்பட்டது.
இதையடுத்து, விபத்து இழப்பீடு கோரி, விழுப்புரம் மோட்டார் வாகன சிறப்பு நீதிமன்றம் எண் -2-இல் மணிகண்டன் தரப்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி 13.11.2014-இல் ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் இழப்பீடு வழங்க சேலம் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டார். ஆனால், அதனை வழங்கவில்லையாம். இதனால், அதே நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதில், இழப்பீடுத் தொகையுடன் வட்டி சேர்த்து வழங்க
அண்மையில் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த தொகையில், சுமார் ரூ.82 ஆயிரம் வரை வழங்காமல் அரசுப் போக்குவரத்துக் கழகம் காலம் தாழ்த்தி வந்ததாம்.
இதனால், நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சென்னையிலிருந்து சேலத்துக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்து விழுப்புரம் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...