கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு சிறந்த தனியார் பள்ளிகளில் பயில ஏற்பாடு
By DIN | Published On : 26th April 2019 06:53 AM | Last Updated : 26th April 2019 06:53 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளில் நுழைவுத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு சிறந்த தனியார் பள்ளிகளில் பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழிலாளர் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 6 ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சிறந்த தரத்திலான கல்வி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
2019-2020 ஆம் கல்வியாட்டுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளி, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பள்ளிகளில் 5 ஆம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற ,கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுபெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளில் இருந்து தொடக்ககல்வித்துறையின் உதவியுடன் தனித்தேர்வு ஒன்று நடத்தப்பட்டு,வட்டாரத்துக்கு ஒரு மாணவர், மாணவி வீதம் தேர்வு செய்து, அவர்களுக்கு அந்தந்த பகுதிகளின் சிறந்த தனியார் பள்ளிகள் மூலம் 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கல்வி வழங்கப்படும்.
மேலும், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அதிகமதிப்பெண் பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுபெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளில் இருந்து மாவட்டத்துக்குள் பத்து மாணவர்கள் (3 மாணவிகள் உள்பட) தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தந்த பகுதிகளின் சிறந்த தனியார் பள்ளிகள் மூலம் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு கல்வி வழங்கப்படும்.
அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஒருநபர் குழு நிர்ணயம் செய்துள்ள பள்ளிகல்விக் கட்டணம் மற்றும் விடுதிக்கட்டணம் ரூ.15000 மற்றும் பராமரிப்புக் கட்டணம் ரூ.5000 தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டொன்றுக்கு வழங்கப்படும்.
மாநில வழி பாடத்திட்டம் வழியில் கல்வி அளிக்கப்படும். விடுதியில் தங்கிப் பயில்வது கட்டாயமில்லை. ஒரு பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் எந்தக் காரணம் கொண்டும் வேறு பள்ளியில் சேர்க்கப்டமாட்டார்கள். இதற்கான விண்ணப்பத்தை www.thoothukudi.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து தொழிலாளர் உதவிஆணையர் (சமூகபாதுகாப்புத் திட்டம்), ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகம், 2 ஆம் தளம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி- 628101 என்ற முகவரிக்கு மே 20 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.