திண்டிவனம் ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர், ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
புதுச்சேரியில் இருந்து திருப்பதி நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் திண்டிவனம் ரயில் நிலையத்தைக் கடந்து சென்றபோது, திண்டிவனம் காவேரிப்பாக்கம் பகுதியில் தண்டவாளத்தை சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் கடக்க முயன்றார்.
அப்போது, ரயிலில் சிக்கிய முதியவரின் காலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவர் உடனடியாக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், முதியவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
பின்னர், முதியவரின் சடலம் உடல்கூறு பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து செங்கல்பட்டு ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.