சாலையோர மின்மாற்றியில் பழுதடைந்த கம்பம்: விபத்து நிகழும் முன் மாற்றப்படுமா?
By DIN | Published On : 05th May 2019 05:37 AM | Last Updated : 05th May 2019 05:37 AM | அ+அ அ- |

சங்கராபுரம் அருகே சாலையோரம் அமைந்துள்ள மின்மாற்றியில் 2 கம்பங்களில் ஒன்று பழுதடைந்த நிலையில் உள்ளது . எனவே, விபத்து நிகழும் முன் இந்தக் கம்பத்தை மாற்ற மின் வாரியத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சங்கராபுரம் - திருக்கோவிலூர் சாலையில் சு.குளத்தூர் கிராம எல்லையில் ஆறுமுகப் பெருமான் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு அருகில் சாத்தனூர் அணை வலதுபுறக் கால்வாய் கரையோரத்தில் சாலையோரம் மின்மாற்றி உள்ளது.
இந்த மின்மாற்றி மூலம் அந்தப் பகுதியில் விவசாய நிலங்களில் உள்ள பாசன மோட்டார்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது.
மின்மாற்றியின் இரண்டு மின் கம்பங்களில் ஒன்று மிகவும் சேதமடைந்து, அதிலுள்ள சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து, உள்ளே இருக்கும் இரும்புக் கம்பிகள் வெளியே தெரிகின்றன.
ஆபத்தான நிலையிலுள்ள இந்த மின்மாற்றி முறிந்து சாலையில் விழுந்தால், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், பயணிகளுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, சேதமடைந்த மின் கம்பத்தை விரைந்து மாற்றி, புதிய மின் கம்பம் நடுவதற்கு மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின்
எதிர்பார்ப்பு.