வீரட்டானேஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா நிறைவு
By DIN | Published On : 19th May 2019 09:54 AM | Last Updated : 19th May 2019 09:54 AM | அ+அ அ- |

திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோயிலில் வைகாசிப் பெருவிழா சனிக்கிழமை நிறைவடைந்தது.
இந்தக் கோயிலில், வைகாசிப் பெருவிழா கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 10 நாள்களுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
விழாவின் 10-ஆம் நாளான சனிக்கிழமை காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புன்யாஹவாச்சனம், கலச ஸ்தாபனம், பஞ்சாசன, பஞ்சவர்ண பூஜைகள் செய்து, வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமானுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது.
வைகாசி பௌர்ணமியை முன்னிட்டு காலை 9 மணிக்கு சம்ஹாரமூர்த்தி மஹா பைரவருக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, ஆலய வலமாக கோபுர தரிசனத்துடன் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் அபிஷேகம், உற்சவ மூர்த்திகளுக்கு சோடசோபஸார தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
தொடர்ந்து, திருவண்ணாமலை பேராசிரியர் பாக்கியலட்சுமி தலைமையில், சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.
இதில் உதவிப் பேராசிரியர் அ.சிதம்பரநாதன், கல்லூரி மாணவர்கள் கிருஷ்ணகுமார், பாலாஜி, ஆனந்த.பாஸ்கர் ஆகியோர் பேசினர்.