திருவெண்ணெய்நல்லூர் அருகே சாலை விபத்தில் இளைஞர் காயமடைந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், நெடுஞ்சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருக்கோவிலூர் அருகே உள்ள கொடிமா காலனி பகுதியைச் சேர்ந்த காளி மகன் சீத்தாராமன் (28). இவர், சொந்த வேலை காரணமாக சனிக்கிழமை திருக்கோவிலூரிலிருந்து பெரியசெவலை நோக்கி பைக்கில் சென்றார்.
திருக்கோவிலூர் - பெரியசெவலை நெடுஞ்சாலையில் டி.குன்னத்தூர் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த கார், பைக் மீது மோதியதால் சீத்தாராமன் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து, அங்கு திரண்ட பொதுமக்கள் அவரை மீட்டு, திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டி வந்த களமருதூரைச் சேர்ந்த ராமானுஜத்தைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
பின்னர், திருக்கோவிலூர் - பெரியசெவலை நெடுஞ்சாலையில் டி.குன்னத்தூர் பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நிகழ்வதால், அந்தப் பகுதியில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த திருவெண்ணெய்நல்லூர் காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி மற்றும் போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, நெடுஞ்சாலைத் துறைக்கு தகவல் தெரிவித்து டி.குன்னத்தூர் பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டனர். மறியலால் திருக்கோவிலூர் - பெரியசெவலை நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.