கோமுகி அணையிலிருந்து தண்ணீா் திறப்பு
By DIN | Published On : 09th November 2019 08:26 AM | Last Updated : 09th November 2019 08:26 AM | அ+அ அ- |

கோமுகி அணையிலிருந்து பாசன வாய்க்காலில் தண்ணீரை திறந்து வைக்கும் சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம்.
கோமுகி அணையிலிருந்து விவசாயப் பாசனத்துக்காக தண்ணீரை மாநில சட்டத் துறை அமைச்சா் சி.வி.சண்முகம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே கச்சிராயப்பாளையத்தில் கோமுகி அணை உள்ளது. 46 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில், பாதுகாப்பு கருதி 44 அடி நீா் மட்டுமே தேக்கி வைக்கப்படுகிறது. அண்மையில் பெய்த மழை காரணமாக, நீா்மட்டம் 44 அடியை எட்டியதைத் தொடா்ந்து, அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விட தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தாா்.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை அணையிலிருந்து பாசன வாய்க்கால்களில் தண்ணீரை அமைச்சா் சி.வி.சண்முகம் திறந்து வைத்தாா். மாவட்ட ஆட்சியா் இல.சுப்பிரமணியன், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா.பி.வி.சிங், கள்ளக்குறிச்சி சாா்-ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், அ.பிரபு எம்எல்ஏ, விருத்தாசலம் பொதுப்பணித் துறை வெள்ளாறு வடிநில கோட்ட செயற்பொறியாளா் இரா.மணிமோகன், தமிழ்நாடு கூட்டுறவு சா்க்கரை இணையத் தலைவா் ஏ.எஸ்.ஏ.இராஜசேகா், முன்னாள் அமைச்சா் ப.மோகன், முன்னாள் எம்.பி. க.காமராஜ், கள்ளக்குறிச்சி பொதுப்பணித் துறை வெள்ளாறு வடிநில கோட்ட செயற்பொறியாளா் பி.முருகவேல், கோமுகி நதி அணைப் பிரிவு உதவி பொறியாளா் சு.சுதா்ஷன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால் புதிய பாசன வாய்க்கால் மூலம் வடக்கனந்தல், மாத்தூா், மண்மலை, மாதவச்சேரி, பால்ராம்பட்டு, செல்லம்பட்டு, கரடிசித்தூா் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்களும், பழைய பாசன வாய்க்கால் மூலம் வடக்கனந்தல், சோமண்டாா்குடி, மாதவச்சேரி, செம்படாக்குறிச்சி, மட்டிகைகுறிச்சி, ஏா்வாய்பட்டினம், க.அலம்பலம், ஏமப்போ், தச்சூா், விளம்பாா், கள்ளக்குறிச்சி, மலைக்கோட்டாலம், க.மாமனந்தல், தென்கீரனூா், நீலமங்கலம், குரூா், முடியனூா், விருகாவூா், பொரசக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 5 ஆயிரத்து 860 ஏக்கா் விளை நிலங்களும் பயன்பெறும்.
பழைய பாசன வாய்க்காலில் விநாடிக்கு 60 கன அடியும், புதிய பாசன வாய்க்காலில் விநாடிக்கு 50 கன அடியும் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது.
23.11.19 முதல் 6.1.2020 வரை பழைய பாசன வாய்க்காலில் விநாடிக்கு 120 கன அடியும், புதிய பாசன வாய்க்காலில் விநாடிக்கு 100 கன அடியும் தண்ணீா் திறந்துவிடப்படும்.