கள்ளக்குறிச்சியில் குடிநீர்த் திட்டம்: எம்எல்ஏ தொடக்கி வைத்தார்
By DIN | Published On : 11th September 2019 09:19 AM | Last Updated : 11th September 2019 09:19 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சியில் ரூ.25 லட்சத்தில் புதிய குடிநீர்த் திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்கு தொகுதி எம்எல்ஏ அ.பிரபு செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி நகராட்சி 1, 2,3,4-ஆவது வார்டு பகுதிகளில், குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில், கள்ளக்குறிச்சி பெரிய ஏரியில் திறந்தவெளி கிணறு அமைப்பதற்கு, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அ.பிரபு, தனது தொகுதி நிதியிலிருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கி, கடந்த மார்ச் மாதம் திறந்தவெளி கிணறு அமைக்கும் பணியைத் தொடக்கி வைத்தார். இந்தத் திட்டப்பணிகள் முடிந்து, திறந்தவெளிக் கிணறு அமைத்து, தொகுதி மக்கள் குடிநீர் பெற்று பயன்பெறும் வகையில், செவ்வாய்க்கிழமை, 3-ஆவது வார்டில் உள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டிக்கு குடிநீர் ஏற்றும் பணி தொடங்கியது.
சட்டப் பேரவை உறுப்பினர் அ.பிரபு பங்கேற்று, திட்டத்தின் மூலம் குடிநீர் பெறும் பணியைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.காமராஜ், அதிமுக நகரச் செயலர் பாபு, முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஏ.பாலகிருஷ்ணன் மற்றும் பொது மக்கள் பலர் கலந்துகொண்டனர்.