மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப் பணி போட்டித் தேர்வுக்கான ஆயத்த பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து, விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மீன் வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான பயிற்சி நிலையம்) இணைந்து, ஆண்டுதோறும் மீனவ கூட்டுறவு சங்க கடல் மற்றும் உள்நாட்டு மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த 20 பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இந்திய
குடிமைப் பணிக்கான போட்டித் தேர்வில் கலந்துக் கொள்ள பயிற்சியளிக்க அரசு ஆணையிட்டுள்ளது.
இப்பயிற்சியில், தமிழகத்தைச் சேர்ந்த கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நல வாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் சேர்ந்து பயன்பெறலாம்.
பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன் வளத்துறையின்இணையதளத்திலிருந்து, கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்பப் படிவங்களை மண்டல மீன்துறை துணை / இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி விண்ணப்பங்களை நிறைவு செய்து, உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வரும் 5.10.2019 பிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, சம்பந்தப்பட்ட மீன்துறை உதவி இயக்குநர் /துணை இயக்குநர்கள் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.