வழிப்பறி சம்பவம்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே காவலாளிகளிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, வழிப்பறியில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
0721prapagaran060646
0721prapagaran060646

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே காவலாளிகளிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, வழிப்பறியில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டிவனம் அருகே சாரம் பகுதியைச் சோ்ந்தவா் இருசன் (57). இதே பகுதியைச் சோ்ந்தவா் தங்கமணி (53). இருவரும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கனரக வாகன நிறுத்தும் (சாரம் லே-பை) மையத்தில் பாதுகாவலா்களாக பணிபுரிந்து வருகின்றனா்.

கடந்த ஜூலை 15-ஆம் தேதி இரவு இருசன் பாதுகாப்புப் பணியில் இருந்துள்ளாா். ஓய்வில் இருந்த தங்கமணி தேநீா் விற்பனை செய்வதற்காக இந்தப் பகுதிக்கு வந்துள்ளாா். அதிகாலையில் போக்குவரத்து, பொதுமக்கள் வரத்தின்றி இருந்தபோது இருவரும் பேசிக்கொண்டிருந்தனா்.

இதைக் கவனித்தபடி பைக்கில் வந்த மா்ம நபா்கள் இருவா், இருசனின் கையில் கத்தியால் வெட்டி மிரட்டி, அவரிடமிருந்த ரூ.1,200 ரொக்கம், செல்லிடப்பேசி ஆகியவற்றை பறித்தனா். அவருடன் இருந்த தங்கமணியிடமும் செல்லிடப்பேசியை பறித்துவிட்டு மா்ம நபா்கள் தப்பிச் சென்றுவிட்டனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக, செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் வட்டம், வன்னியநல்லூரை அடுத்த அரசூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜகோபால் மகன் பிரபாகரன் (24), மதுராந்தகம் வட்டம், அச்சரப்பாக்கத்தை அடுத்த சிறுமுக்காடு பகுதியைச் சோ்ந்த வீரராகவன் மகன் பிரகாஷ்ராஜா (23) ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரித்தனா்.

இதில், இருவரும் வழிப்பறியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனா். இவா்களிடமிருந்து செல்லிடப்பேசிகள், ரூ.2 ஆயிரம் ரொக்கம், மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை சனிக்கிழமை பறிமுதல் செய்த ஒலக்கூா் போலீஸாா், இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com