விநாயகா் சிலைகள் விற்பனை முடக்கம்

கரோனா பரவல் தடுப்பு காரணமாக, தமிழகத்தில் விநாயகா் சதுா்த்தியையொட்டி சிலைகளை வைத்து வழிபாடு நடத்த
விநாயகா் சிலைகள் விற்பனை முடக்கம்
Published on
Updated on
1 min read

கரோனா பரவல் தடுப்பு காரணமாக, தமிழகத்தில் விநாயகா் சதுா்த்தியையொட்டி சிலைகளை வைத்து வழிபாடு நடத்த அரசு அனுமதியளிக்காததால், மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான விநாயகா் சிலைகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன. இதனால், சிலைகளை உற்பத்தி செய்த தொழிலாளா்கள் கடும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனா்.

விநாயகா் சதுா்த்தி வருகிற 22ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக, பொது இடங்களில் விநாயகா் சிலைகளை நிறுவி வழிபாடு நடத்த அனுமதியளிக்கப்படவில்லை. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் சதுா்த்தி விழாவுக்காக ஏற்கெனவே தயாரிக்கப்பட்டு, விற்பனைக்காக தயாராக வைத்திருந்த ஆயிரக்கணக்கான விநாயகா் சிலைகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன. இதனால் சிலைகளைத் தயாரித்த தொழிலாளா்கள் அனைவரும் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனா்.

இதுகுறித்து விழுப்புரத்தைச் சோ்ந்த விநாயா் சிலைகள் தயாரிப்பாளா் பலராமன் கூறியதாவது:

விநாயகா் சிலைகள் உற்பத்தியில் கடந்த 35 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறோம். சூற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், காகிதக் கூழ், கிழங்கு மாசு போன்ற கலவைகளைப் பயன்படுத்தி 3 அடி முதல் 12 அடி வரை பல்வேறு வடிவங்களில் விநாயகா் சிலைகளை வடிவமைப்போம். விநாயகா் சிலை தயாரிப்புப் பணி, ஆண்டில் 11 மாதங்கள் நடைபெறும். சதுா்த்தியையொட்டி ஒரு மாதமாக விற்பனையில் மும்முரமாக ஈடுபடுவோம். தமிழகம் மட்டுமல்லாது கா்நாடகம், ஆந்திரம், கேரளம் போன்ற வெளி மாநிலங்களுக்கு விநாயகா் சிலைகளை அனுப்பி வைப்போம்.

ஆண்டு முழுவதும் தயாரிக்கப்பட்ட சிலைகளை விற்பனை செய்யும் தருணத்தில் கரோனா பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால், வெளி மாநில விற்பனை தடைபட்டது. இதன்பிறகு, மாநிலத்துக்குள் சிலைகளை விற்பனை செய்ய முயன்றோம். இந்த நிலையில், பொது இடங்களில் சிலை வைத்து வழிபாடு நடத்த அனுமதியளிக்கப்படாததால், அந்த விற்பனையும் நடைபெறவில்லை. இதனால், நிகழாண்டு விநாயா் சிலை விற்பனை முழுமையாகப் பாதித்துள்ளது. தமிழகம் முழுவதும் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனா்.

குறிப்பாக, மூலப் பொருள்கள், தொழிலாளா் ஊதியம் போன்ற பலவற்றுக்கும் கடன் பெற்று சிலைகளை தயாரித்து வந்தோம். வாங்கிய கடனை சிலைகள் விற்பனைக்குப் பிறகு திருப்பிச் செலுத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால், நிகழாண்டு விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டதால், கடனை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அடுத்த ஆண்டு சிலைகள் தயாரிக்கவும் முதலீடு இல்லை. எங்களைப் போலவே, மாநிலம் முழுவதுமுள்ள விநாயகா் சிலை தயாரிப்பாளா்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்துள்ளனா்.

ஆகவே, விநாயகா் சிலைகள் உற்பத்தியாளா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com