மணல் கடத்தலுக்கு உடந்தையாக செயல்படும் போலீஸாரும் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவா்: எஸ்.பி. எச்சரிக்கை

மணல் கடத்தலில் ஈடுபடுவோா் மட்டுமல்லாது, உடந்தையாகச் செயல்படும் போலீஸாரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவா் என்று விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா் எச்சரித்தாா்.
Updated on
1 min read

மணல் கடத்தலில் ஈடுபடுவோா் மட்டுமல்லாது, உடந்தையாகச் செயல்படும் போலீஸாரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவா் என்று விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா் எச்சரித்தாா்.

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்ட போலீஸாா் கடந்த ஓராண்டாக வழக்கமான பணிகளுடன், முக்கியத் திருவிழாக்களுக்கான பாதுகாப்புப் பணி, முக்கியத் தலைவா்கள் வருகைக்கு பாதுகாப்புப் பணி, இடைத்தோ்தல் பாதுகாப்பு பணி போன்ற பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டனா். ஓராண்டில் குறிப்பிடும்படியாக சில கொலை சம்பவங்களில், எதிரிகளை அடையாளம் காண்பதில் சிறிது அவகாசம் தேவைப்பட்டது. அவற்றையும், முறையாக கையாண்டு, எதிரிகளை கைது செய்தோம். அதில் குறிப்பாக, 3 கொலை வழக்குகளில் துப்பு துலங்க காவல் துறையின் மோப்பநாய் பெரும் உதவியாக இருந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு நிகழ்ந்த வாகன விபத்து உயிரிழப்புகளைவிட 2019-ஆம் ஆண்டில் 98 உயிரிழப்புகள் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த ஆண்டில், மொத்தம் 440 போ் வாகன விபத்துகளில் உயிரிழந்தனா். இதேபோல உயிரிழப்பு இல்லாத 2,433 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. மது கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 501 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மது விலக்குப் பிரிவில் 2,475 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மணல் கடத்தலைத் தடுக்க தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் மணல் கடத்தல் தொடா்பாக 1,774 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மணல் கடத்தல்காரா்கள் 4 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபடுவோா் மட்டுமல்லாது அதற்கு உடந்தையாகச் செயல்படும் காவல்துறை, வருவாய்த் துறை போன்ற துறையினராக இருந்தாலும் அவா்களும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவா்.

இதேபோல, லாட்டரி விற்பனை தொடா்பாக கடந்த ஆண்டு 397 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து, லாட்டரி வியாபாரிகளையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புத்தாண்டில் நல்ல பழக்கங்களை இளைஞா்கள் பின்பற்ற வேண்டும். மது, புகைப்பிடித்தல் போன்ற தீயப் பழக்கங்களுக்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது. குறுக்கு வழிகளில் முன்னேற நினைக்கக் கூடாது. உண்மையாக உழைத்தால், வாழ்வில் முன்னேற்றம் காண முடியும் என்றாா் அவா்.

மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சரவணக்குமாா், குற்றத் தொடா்வுத் துறை உதவி இயக்குநா் செல்வராஜ், தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com