விழுப்புரம் மாவட்டத்தில் 383 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நிகழாண்டு பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துக்கேட்பு நிகழ்ச்சி தொடங்கி நடக்கிறது.
விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய கருத்துக்கேட்பு நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தொடங்கி வைத்து பார்வையிட்டார். ஒன்பதாம் வகுப்பு தொடங்கி 10, 11 பிளஸ் டூ வகுப்புகள் மாணவர்கள் பெற்றோர், தனித்தனியாக வரிசையாக அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் அந்தந்த வகுப்பறையில் உள்ள ஆசிரியர்களிடம், பள்ளி திறக்கலாம், திறக்க வேண்டாம் என்ற விண்ணப்ப படிவத்தை பெற்று தங்களது கருத்தினை பதிவு செய்தனர்.
பதிவு செய்த கருத்தினை அங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் செலுத்திச் சென்றனர். அனைத்து பெற்றோர்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, முகக்கவசம் அணிந்த பிறகே அனுமதிக்கப்பட்டனர். இதில் மாவட்டம் முழுவதும் உள்ள 383 பள்ளிகளில் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறும். இந்த கருத்துக் கேட்பு பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறும், கருத்துகள் பெறப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு தகவல் அனுப்பி வைக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெரும்பாலான பெற்றோர்கள் பருவமழை நேரம் என்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் பள்ளிகள் திறக்கக் கூடாது எனவும், ஜனவரி மாதத்தில் திறக்கலாம் என்றும் தெரிவித்தனர். ஒரு சில பெற்றோர் பிள்ளைகளின் படிப்பு வீணாவதால் உடனடியாக பள்ளி திறக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.